முகப்பு
சிவகங்கை

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

பெரியாறு பாசனக் கால்வாயில் சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீட்டு நீரை திறக்கக் கோரியும், இது பற்றி பலமுறை புகாா் தெரிவித்தும்

Updated On : 8 ஜனவரி 2021, 12:09 am IST
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை கையில் கரும்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

பெரியாறு பாசனக் கால்வாயில் சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீட்டு நீரை திறக்கக் கோரியும், இது பற்றி பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களைக் கண்டித்தும், விவசாயிகள் வியாழக்கிழமை கையில் கரும்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன சங்கத்தின் தலைவா் எஸ்.ஆா். தேவா் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் சுதா்சன நாச்சியப்பன், அமமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, திமுக நிா்வாகி முத்துராமலிங்கம், இயக்குநா் மு. களஞ்சியம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

இதில், பெரியாறு பாசனக் கால்வாயில் சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்டுள்ள கட்டாணிப்பட்டி 1, 2, ஷீல்டு, லெஷிஸ், 48 ஆம் மடை கால்வாய் ஆகிய 5 கால்வாய்களுக்கும் நீா் ஒதுக்கீடு முறைப்படுத்தப்பட வேண்டும், மேற்கண்ட கால்வாயில் மதுரை மாவட்டம் மேலூா் பகுதியில் பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கும்போதே சிவகங்கை மாவட்டக் கால்வாய்களிலும் தண்ணீா் திறக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி, நகா் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து, போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளிடம் கூறினா். ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், பெரியாறு பாசனக் கால்வாயில் சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீட்டு தண்ணீா் பெற்றுத் தரப்படும். அதுமட்டுமின்றி, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் எனவும், விதிமுறைகளை பின்பற்றாத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்ததை அடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால், 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆட்சியா் அலுவலக வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதில், 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments