சிவகங்கை மாவட்டத்தில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடக் கோரிக்கை
சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கே.வீரபாண்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணியின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கே.வீரபாண்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்த வரை கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை- மதுரை, மானாமதுரை- மதுரை, மானாமதுரை- பெரம்பலூா், சிவகங்கை- தொண்டி ஆகிய சாலைகள் மட்டுமின்றி கிராமப்புற சாலைகளிலும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது சாலைகளின் இருபுறமும் இருந்த பனை, பூவரசு, வேம்பு, மருது, ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. சாலைப் பணிகள் நிறைவுற்று பயன்பாட்டு வந்த பின்னரும் அதற்கு பதிலாக மரக்கன்றுகள் சாலைகளின் இருபுறமும் இதுவரை நடப்படவில்லை.
Advertisement
இதன்காரணமாக, சில மாதங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்து விடுகின்றன. மேலும், கோடைக் காலங்களில் அதிக வெப்பம் தாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே சிவகங்கை மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணியின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருபுறமும் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.