கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரம்: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம்
இதய நோய்க்குப் பல காரணங்கள் உள்ளன. கங்குலி எங்களுடைய விளம்பரத் தூதராகத் தொடர்ந்து செயல்படுவார்...
இதயத்துக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறி சமையல் எண்ணெய் விளம்பரத்தில் செளரவ் கங்குலி நடித்திருந்தார். இந்த விளம்பரம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவரும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாளை வீடு திரும்புவாா் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதயத்துக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறி சமையல் எண்ணெய் விளம்பரத்தில் கங்குலி நடித்திருந்தார். கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அந்த விளம்பரத்தை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் பலரும் கேலியான பதிவுகளை வெளியிட்டார்கள். இதையடுத்து சமையல் எண்ணெய் விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து சமையல் எண்ணெயைத் தயாரிக்கும் அதானி வில்மர் நிறுவனம் சார்பில் அதன் தலைமை அதிகாரி அங்ஷு மாலிக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
எங்களுடைய சமையல் எண்ணெய் மருந்து அல்ல, சமையல் எண்ணெய் மட்டுமே. இதய நோய்க்குப் பல காரணங்கள் உள்ளன. கங்குலி எங்களுடைய விளம்பரத் தூதராகத் தொடர்ந்து செயல்படுவார். எங்களுடைய தொலைக்காட்சி விளம்பரம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. கங்குலியுடன் அமர்ந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை செயல்படுத்துவோம். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று, யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.