விஜேந்தரிடம் ஊக்க மருந்து சோதனை: விளையாட்டு அமைச்சகம் உத்தரவு
குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீதான போதை மருந்து பயன்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீதான போதை மருந்து பயன்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரிடம் உடனடியாக ஊக்க மருந்து சோதனை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கனடா வாழ் இந்தியரான அனூப் சிங் கஹலான் கடந்த மாதம் 3ஆம் தேதி பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.130 கோடி மதிப்பிலான 26 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
கஹலானிடம் நடத்திய விசாரணையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ராம் சிங்குடன் அடிக்கடி செல்போனில் பேசியதாகக் கூறியிருந்தார்.
Advertisement
இதைத் தொடர்ந்து பஞ்சாப் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின் "இதுவரை நடத்தப்பட்ட புலனாய்வின்படி, விஜேந்தர் சிங் 12 தடவையும், அவரது நண்பர் ராம் சிங் 5 தடவையும் ஹெராயின் போதைப்பொருளை உட்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் அவரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணைய இயக்குநருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
சிறந்த விளையாட்டு வீரர் மீதான இதுபோன்ற புகார்கள், நாட்டில் உள்ள மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் மனத்திண்மையை குலைக்கும். இதனால் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிடம் உடனே ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் ஹெராயின் போதை மருந்தை பயன்படுத்தவில்லை என விஜேந்தர் மறுத்துள்ள நிலையில் ஊக்க மருந்து சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து அவரது கருத்தை அறிய இயலவில்லை.
பயிற்சியாளர் ஆலோசனை: இதனிடையே, தலைமுடி மற்றும் ரத்த மாதிரிகளை போலீஸாரிடம் வழங்குமாறு குத்துச்சண்டை வீரர் விஜேந்தருக்கு வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியக் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜி.எஸ்.சாந்து ஆலோசனை வழங்கியுள்ளார்.