மலேசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து
மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் பி.வி.சிந்து 21-13, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் செனா ஜியாவூனை தோற்கடித்தார். வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங்கின் சியூங் நகனை சந்திக்கிறார் சிந்து.
3-வது சுற்றில் குருசாய் தத்: ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் குருசாய் தத் 21-8, 21-9 என்ற நேர் செட்களில் மலேசியாவின் கியான் ஜின் கோவையும், சமீர் வர்மா 21-15, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வெய் ஃபெங் சாங்கையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
Advertisement
இதேபோல் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் 2-வது சுற்றில் 21-9, 21-19 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சுப்பான்யூவை தோற்கடித்தார். அதேநேரத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-15, 14-21, 15-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜைனுதீனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.