பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. லக்னௌ அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியில் ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அந்த அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த சீசனில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த், 269 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடப்பு ஐபிஎல் சீசனிலும் ரிஷப் பந்த் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை எனவும், ரிஷப் பந்த்தான் அவருடைய விக்கெட்டினை எளிதில் விட்டுக் கொடுத்து ஆட்டமிழக்கிறார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் அவர் விளையாடும் விதம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடவில்லை. லக்னௌ அணி அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களை அதிகம் நம்பியிருக்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வரவில்லை.
லக்னௌ அணியில் அய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் மற்றும் ரிஷப் பந்த் போன்ற மிகவும் அதிக திறன் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் சரியான பார்ட்னர்ஷிப் இல்லை. 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைவது கூட அரிதாக இருக்கிறது. ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை பந்துவீச்சாளர்கள் வீழ்த்துவதாக நான் நினைக்கவில்லை. அவரே தன்னுடைய விக்கெட்டினை விட்டுக் கொடுத்து ஆட்டமிழந்து செல்கிறார் என்றார்.