டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் குறித்தும், டி20 உலகக் கோப்பைத் தொடர் குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது வீராங்கனைகளுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிரணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் நாளை (ஏப்ரல் 17) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது அணியில் உள்ள வீராங்கனைகள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளோம். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டி20 தொடர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக எங்களை தயார்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் அனைத்து வீராங்கனைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால், ஒரு அணியாக டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முழுமையாக தயாராக இருப்போம். சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், டி20 தொடரை வெல்வதற்காக இங்கு உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அடுத்து எங்களது முக்கிய இலக்கு டி20 உலகக் கோப்பையை வெல்வதே என்றார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 5 ஆம் தேதி வரை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.