ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் விராட் கோலியை தில்லி அணி ஏலத்தில் எடுக்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் விராட் கோலியை தில்லி அணி ஏலத்தில் எடுக்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 18 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் தில்லி டேர்டெவில்ஸ் (தற்போதைய தில்லி கேபிடல்ஸ்) விராட் கோலியை ஏலத்தில் எடுக்காமல் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பேசியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் தில்லி டேர்டெவில்ஸ் அணியில் ஷிகர் தவான் மற்றும் திலகரத்னே தில்ஷன் இருவரும் இருந்தனர். அவர்கள் இருவருமே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடக் கூடியவர்கள். ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீரும் நானும் விளையாடியதால் அவர்கள் மூன்றாவது மற்றும் 5-வது வீரர்களாக களமிறங்கினர். நான்காவது வீரராக மனோஜ் திவாரி விளையாடினார். அதனால், டாப் ஆர்டரில் எங்களிடம் நிறைய பேட்டர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பேட்டிங் ஆர்டரை முடிவு செய்வது மிகவும் கடினமாக இருந்தது.
அந்த நேரத்தில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறங்கும் விராட் கோலியை அணியில் எடுத்தால், அவரை விளையாட வைப்பதற்கு எங்களிடம் எந்தவொரு இடமும் இல்லை. மேலும், அணியில் பேட்டர்கள் நிறைய இருந்தார்கள். எங்களிடம் பந்துவீச்சாளர்கள் குறைவாக இருந்தனர். அதனால், விராட் கோலிக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தோம் என்றார்.
அறிமுக சீசனில் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ. 12 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன் பின், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மிகவும் வெற்றிகரமான வீரராக மாறினார் விராட் கோலி. ஆர்சிபிக்காக இதுவரை 272 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 8889 ரன்கள் குவித்துள்ளார். அதில் 8 சதங்கள் மற்றும் 65 அரைசதங்கள் அடங்கும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 228 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.