முகப்பு
கிரிக்கெட்

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 7:31 pm IST
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சாய் சுதர்சன் - படம் | ஐபிஎல்
பகிர்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சஞ்சு சாம்சன் 11 ரன்கள், உர்வில் படேல் 4 ரன்கள், சர்ஃபராஸ் கான் 0 ரன், டெவால்ட் பிரேவிஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன் பின், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்த இணை சற்று தாக்குப் பிடித்தது. இருப்பினும், ஷிவம் துபே 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கார்த்திக் சர்மா 15 ரன்கள் எடுத்தார்.

தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடைசிக் கட்டத்தில் சற்று அதிரடி காட்டினார். நிதானமாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில் அதிரடியாக 18 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷத் கான் இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சாய் சுதர்ஷன் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.

அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோஸ் பட்லர் 39* ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 33 ரன்களும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நூர் அகமது மற்றும் அகீல் ஹுசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும். குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

In the IPL series, Gujarat Titans defeated Chennai Super Kings by 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.