தில்லி கேபிடல்ஸ் அழுத்தத்தில் இருக்கிறதா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தில்லி கேபிடல்ஸ் மோசமான தோல்வியைத் தழுவியது.
ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தில்லி கேபிடல்ஸ் அணி 75 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
இதற்கு முந்தையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 264 ரன்கள் குவித்தும் தில்லி கேபிடல்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இமாலய இலக்கை எடுத்து பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தோல்வி, குறைந்த ரன்கள் எடுத்து ஆர்சிபிக்கு எதிராக மோசமான தோல்வி என இந்த இரண்டு தோல்விகள் தில்லி கேபிடல்ஸுக்கு பல விஷயங்களை யோசிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கண்டிப்பாக தில்லி கேபிடல்ஸ் அச்சத்தில் இருக்கும். ஆனால், அவர்கள் அச்சப்படுவதற்கு இது சரியான நேரமில்லை. அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இந்த தொடரை அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரை தில்லி கேபிடல்ஸ் நன்றாக தொடங்கினார்கள். ஆனால், அவர்கள் விளையாடும் விதம் தற்போது மாறியுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி இரண்டு புள்ளிகள் கிடைக்காமல் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டால், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி அவர்களுக்கு கண்டிப்பாக வேதனையளிக்கும். அதனால், ஆர்சிபிக்கு எதிரான தோல்வியை மறந்துவிட்டு, தில்லி கேபிடல்ஸ் புத்துணர்ச்சியுடன் விளையாட வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.