சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதைப் பற்றி...
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் திடலில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 52-வது போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் விளையாடியது.
இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் (5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரோமன் பௌவல் 19 பந்துகளில் 34 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். கேப்டன் சாய் ஹோப் 32 ரன்கள், ஷிம்ரன் ஹெட்மேயர் 27 ரன்கள் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 14 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சஞ்சு சாம்சன் அதிரடி
பின்னர், 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் இருவரும் தலா 10 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள், திலக் வர்மா 27 ரன்கள், ஹார்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 97* ரன்கள் எடுத்தார்.