கார்த்திக் சர்மாவை நினைத்து பெருமைப்படுகிறோம்; சிஎஸ்கே பயிற்சியாளர் பாராட்டு!
இளம் வீரர் கார்த்திக் சர்மா விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் கார்த்திக் சர்மா விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் கார்த்திக் சர்மாவின் அரைசதங்களால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
Advertisement
இந்த நிலையில், இளம் வீரர் கார்த்திக் சர்மா விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் அவரைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸில் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடியிருந்தாலும், மிகப் பெரிய போட்டிகளில் அவர்களை எப்படி அறிமுகப்படுத்தப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம். இளம் வீரர்களின் மனநிலையை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். சென்னை சூப்பர் கிங்ஸில் கார்த்திக் சர்மாவை அறிமுகம் செய்தபோது, அவருக்கு ரன்கள் குவிப்பது எளிதாக இருக்கவில்லை. அதன் பின், அவர் கடினமாக உழைத்தார். அதற்கான பலன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கிடைத்துள்ளது.
கார்த்திக் சர்மா சிறப்பான வீரர். அவர் திறமை வாய்ந்த வீரர் என்பதன் காரணத்தினாலேயே ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டார். நாளுக்கு நாள் அவருடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடிய விதத்தை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த பின், அனுபவம் வாய்ந்த ஷிவம் துபே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் இருக்கும்போது, இளம் வீரர் கார்த்திக் சர்மா அவர்களுக்கு முன்பாக களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.