முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
லக்னௌவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
லக்னௌவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மே 4) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக பிளேயிங் லெவனில் இடம்பெறாமலிருந்த ரோஹித் சர்மா, நேற்றையப் போட்டியில் அதிரடியாக 44 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
Advertisement
இந்த நிலையில், காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாட முடியாத சூழல் உருவாகாமல் இருந்திருந்தால், மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான கடும் போட்டியாளராக இருந்திருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிகப் பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது, வலுவான தொடக்கம் என்பது மிகவும் அவசியம். ரோஹித் சர்மா அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்ததுமின்றி, பின்னால் விளையாடும் வீரர்கள் சிரமப்படாத அளவிற்கு அதிக அளவிலான ரன்களையும் குவித்துவிட்டார். அவர் மிகவும் நன்றாக விளையாடினார். அவர் சதம் விளாசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ரோஹித் சர்மாவின் காயம் சீக்கிரம் குணமாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாடியிருந்தால், மும்பை அணி ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான கடும் போட்டியாளராக கூட இருந்திருக்கலாம். இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், மும்பை இந்தியன்ஸ் அணியால் 14 புள்ளிகள் பெற முடியும். மும்பைக்கு சாதகமாக மற்ற அணிகளின் முடிவுகள் இருந்தால், நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது, ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், மும்பை விளையாடிய 5 போட்டிகளிலும் அவர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.