ஷ்ரேயாஸ், சூர்யவன்ஷி, ரஜத் படிதாரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்க: மே.இ.தீவுகள் வீரர்
இந்திய அணியில் ஷ்ரேயாஸ், ரஜத் படிதார், சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் இயான் பிஷப் தெரிவித்துள்ளதைப் பற்றி...
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் இயான் பிஷப் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் உள்ள 14 நகர்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதான இளம்வீரர் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 404 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக ஹைதாரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் விளாசியிருந்தார்.
Advertisement
சூர்யவன்ஷி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் நிலையில், அவர் இந்திய அணியில் விளையாடத் தயாராகி விட்டதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியின் விரைவில் சூர்யவன்ஷி களமிறங்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இயான் பிஷப்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக இயான் பிஷப் பேசுகையில், “நான் என்னுடைய அணியில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்திருக்கிறேன். தொடக்க ஆட்டக்காரர்கள் இடது - வலது காம்பினேஷனில் இருக்கும் வகையில் தேர்வு செய்துள்ளேன்.
ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இடது கை ஆட்டக்காரருக்காக இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷியைத் தேர்வு செய்துள்ளேன். அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் தயாராக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், நான் பிரப்சிம்ரன் சிங்கையும் தேர்ந்தெடுத்துள்ளேன். பிரியான்ஷ் ஆர்யாவும் இந்தப் பட்டியலில் இருக்கிறார். அவர் இந்த சீசனில் நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார்.
நான் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதேபோல மற்றொரு வீரர் ரஜத் படிதார் மற்றும் அபாரமாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் ஜிதேஷ் ஷர்மாவைவிட சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நிதிஷ் குமார் ரெட்டி ரன்களைக் குவித்து வருவதுடன், அவ்வப்போது ஓரளவிற்கு நன்றாகப் பந்துவீசி விக்கெட்டுகளையும் எடுக்கிறார்.
சுழற்பந்து வீச்சாளர்களில் க்ருணால் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹலும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். 36 வயதானாலும், சிறப்பாக பந்து வீசிவரும் பெங்களூர் வீரர் புவனேஷ்வர்குமாரும் நான் தேர்வு செய்துள்ள அணியில் இடம்பெற்றுள்ளார்” என்றார்.