மைல்கல்கள் சிறப்பானதுதான்; ஆனால்... மனம் திறந்த சஞ்சு சாம்சன்!
ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாவது...
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன், “மைல்கல்கள் சிறப்பானதுதான்; ஆனால், அணியின் வெற்றி முக்கியமானது” எனக் கூறினார்.
அருண் ஜேட்லி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 155/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 17.3 ஓவர்களில் 159/2 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சிஎஸ்கேவின் சஞ்சு சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 87 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. விருது வென்ற பிறகு அவர் பேசியிருப்பதாவது...
Advertisement
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆடுகளம் எப்படி இருக்கிறது, எவ்வளவு இலக்கு வேண்டும் என்பதைப் பார்த்து ஆட்டமிழக்காமல் 30-35 ரன்கள் பவர்பிளேவில் எடுத்தால் போதுமென்று இருந்தேன். சுழல் பந்துகளை மிடில் ஓவர்களில் அடித்து ஆடலாம் என்று திட்டமிட்டு இருந்தேன்.
அதனால், பவர்பிளேவில் பொறுமையாக ஆடினாலும் என்னால் மிடில் ஓவர்களில் அதை சரிசெய்ய முடியுமென நினைத்தேன். அந்தத் திட்டம் சரியாக வந்தது. இது சதத்தை விட நல்ல ஆட்டம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். சதம் அடிப்பது எப்போதுமே சிறப்பானதுதான்; ஆனால், அணி வெற்றி பெறுவதும் முக்கியம்.
எனது பார்ட்னரும் நன்றாக விளையாடி வருகிறார். அவரிடம் சென்று ’எனக்கு சதம் அடிக்க சிங்கிள் எடுத்துக்கொடு’ எனக் கேட்க முடியாது. அதனால், எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆட்டமிழக்காமல் போட்டியை முடித்துக்கொடுப்பது திருப்திகரமாக இருக்கிறது என்றார்.
ஏற்கெனவே இந்த சீசனில் சஞ்சு சாம்சன் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். இந்தப் போட்டியிலும் சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் ரன் ரேட் வேண்டும் என்பதால் அவர் சுயநலமாக விளையாடாமல் அணியின் நலனுக்காக விளையாடியது பாராட்டப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் லக்னௌ அணியை சேப்பாக்கத்தில் மே.10ஆம் தேதி மோதவிருக்கிறது.