முகப்பு
செய்திகள்

தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ரபாடாவுக்கு தடை!

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா 2 போட்டிகளில் விளையாட ஐசிசி திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.

Updated On : 12 மார்ச், 2018 at 8:47 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என்று தொடரில் சமநிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அற்புதமாகப் பந்துவீசி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய வேகபந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா, 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், காகிஸோ ரபாடா (வயது 22) அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை வீழ்த்திய ரபாடா, அடுத்தக் கணம் அவருடைய தோள்பட்டையில் இடித்தபடி ஓடினார். இதையடுத்து ஆட்ட நடுவர்கள் தர்மசேனா மற்றும் கஃபானே ஆகியோர் அவர் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் அளித்தார்கள். 

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா அவர் அருகில் வந்து ஆக்ரோஷமாகக் கத்தினார். ஐசிசி விதிமுறைகளின்படி ஒரு பந்துவீச்சாளர் இதுபோன்ற செண்ட்ஆஃப் வழங்கக்கூடாது. இதனால் ரபாடா மீது நடுவர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளார்கள். 

ஒரு ஆட்டத்தில் இருமுறையும் புகார் அளிக்கப்பட்டதால் ரபாடா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட காரணத்தால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைகளை போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.