ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
இ-சிகரெட் பிடித்ததற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் மீது 25% அபராதம் விதிக்கப்படலாம் எனத் தகவல்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கெனவே இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கேப்டன் ரியான் பராக் மீதும் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரின்போது, திடலில் வீரர்கள் அமரும் பகுதியில் கைப்பேசி பயன்படுத்தத் தடை இருக்கும்போது, வீரர்கள் அமரும் பகுதியில் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் கைப்பேசி பயன்படுத்தியதாக ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, லக்னௌ அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பர்கரின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமையில் (ஏப். 28) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ஆவது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி, இ-சிகரெட் பிடிக்கும் காட்சி நேரலையில் வெளியானது.
ஐபிஎல் விதிகளின்படி, ஓய்வறை, திடல் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரியான் இ-சிகரெட் பயன்படுத்தியதால், போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகித அபராதமும், நிலை 1 குற்றமாகக் கருதப்பட்டு - ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியாவில் 'இ-சிகரெட்' பயன்படுத்துவது 'மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019'படி சட்டவிரோதமானது. நாட்டில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இ-சிகரெட் தடைச் சட்டத்தின்படியும் ரியானுக்கு அபராதமோ சிறைத்தண்டனையோ வழங்கவும் வாய்ப்புகள் உள்ளன.