ஆகஸ்ட் மாதத்துக்குள் தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்: நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு
தமிழகம் முழுவதும் உள்ள 12,536 தனியார் பள்ளிகளுக்கு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான
தமிழகம் முழுவதும் உள்ள 12,536 தனியார் பள்ளிகளுக்கு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கூறினார்.
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்கான விசாரணை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கட்டண நிர்ணயக் குழுவின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் சுமார் 100 தனியார் பள்ளிகளிடம் கட்டண உயர்வு தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட கேள்வி படிவங்கள் பெறப்பட்டன. அவர்கள் கோரும் கட்டண உயர்வு தொடர்பாகவும் கேட்டறியப்பட்டது.
Advertisement
கட்டண நிர்ணயப் பணிகள் தொடர்பாக நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு வெள்ளிக்கிழமை கூறியது:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். கட்டண நிர்ணயத்துக்காக பள்ளிகளிடம் பல்வேறு தகவல்கள் கோரி கேள்வித் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் - மாணவர் விகிதம், வகுப்பறை வசதிகள், ஆசிரியர்களின் கல்வித் தகுதி, ஒரு மாணவருக்கு செலவிடும் தொகை, பள்ளியில் உள்ள நூலகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் பள்ளிகளுக்கு கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும்.
இதுவரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத 910 பள்ளிகளுக்கு இந்த முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. நாளொன்றுக்கு 100 பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளொன்றுக்கு 70 நர்சரி பள்ளிகள், 30 மெட்ரிக் பள்ளிகள் வீதம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன.
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்துப் பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முதல் பருவத்துக்குள் பள்ளிகளுக்கு புதிய கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.