தேர்தல் ஆதாயத்துக்காக செயல்படவில்லை: ராமதாஸ்
தேர்தலை மனதில் வைத்து அனைத்து சமுதாயப் பேரியக்கம் செயலாற்றவில்லை என்றார் பாமக நிறுவனர் மருத்துவர்
தேர்தலை மனதில் வைத்து அனைத்து சமுதாயப் பேரியக்கம் செயலாற்றவில்லை என்றார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து சமுதாயப் பேரியக்க கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது அல்ல எங்கள் இயக்கம். பட்டியல் இனத்தில் 76 ஜாதிகள் உள்ளன. அதில், சில பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று ஜாதி மோதல்களை உருவாக்கப் பார்க்கின்றனர்.
சுயநலம்மிக்க தலைவர்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். சிலரின் தவறான வழி நடத்தல் காரணமாக தற்போது நிலவி வரும் சமூக நல்லிணக்கம் கெடும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து சமுதாய பேரியக்கம் செயலாற்றவில்லை.
Advertisement
அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த இயக்கத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் இயக்கங்கள் எவை என்பதை விரைவில் அறிவிப்பேன். அது போல வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் ஈட்டியவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவில்லையெனில் தில்லி வரை சென்று போராடுவோம் என்றார் அவர்.