நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்
நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்துள்ளது.
நடிகர் விஜயகுமாருக்கும், அனுபவ் நிறுவன இயக்குனர் நடேசனுக்கும் இடையே 1994-ஆம் ஆண்டு நில விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகேயுள்ள களிப்பட்டூரில் உள்ள 12.32 ஏக்கர் நிலத்தை அனுபவ் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டு, ரூ.1.53 கோடி தொகையை விஜயகுமார் வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் 6.81 ஏக்கர் நிலத்தில் விஜயகுமாருக்கு உரிமை இல்லை என்றும் அதனால் ரூ.90.95 லட்சம் தொகையை தர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில்(கம்பெனி வழக்குகள்) வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் எம்.ரவீந்திரன் ஆராயும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரச்னைக்குரிய நிலத்தில் அரசு நிலமும் அடங்கியிருக்கிறது என்ற அறிக்கையை அவர் சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து இதில் குற்ற முகாந்திரம் இருப்பதால், இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்து உத்தரவிட்டது. அதனடிப்படையில் விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை 11-ஆவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
Advertisement
வழக்கு ரத்து: அனுபவ் நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கி ஒப்பந்தம் செய்து கொண்டதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் விஜயகுமார் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எம்.ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். சில உண்மைகளை மறைத்து தனி நீதிபதியின் உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே விஜயகுமார் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.