முகப்பு
தமிழ்நாடு

வரவேற்பு பெறாத 1,000 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம்

தமிழக அரசு அறிமுகம் செய்த சூரிய ஒளிசக்தி மூலம் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு தனியார்

Updated On : 2 மார்ச் 2013, 4:54 am IST
பகிர்:

தமிழக அரசு அறிமுகம் செய்த சூரிய ஒளிசக்தி மூலம் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை.

ஒப்பந்தம் முடிவு செய்யும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், மொத்தம் 226 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு 29 நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சூரிய ஒளி சக்தி மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,000 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதில் 1,000 மெகா வாட் தனியார் மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவது மற்றும் ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேற்கொண்டது.

Advertisement

Advertisement

ஒப்பந்தப் புள்ளிகள்: இந்த திட்டத்தில் பங்கு பெற 92 நிறுவனங்கள் மொத்தம் 499 மெகா வாட் அளவு மின் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்தன.

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் முழுமையான ஆவணங்கள் இல்லாததால் ஒரு நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜனவரி 30-ஆம் தேதி, அனுமதிக்கப்பட்ட 91 நிறுவனங்களின் விலை ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.

இதில் ஒரே ஒரு நிறுவனம் யூனிட் ரூ. 5.97-க்கு ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பித்திருந்தது. அதிகபட்சமாக யூனிட் ரூ. 17.95 வரை ஒப்பந்தப் புள்ளிகளை பிற நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்தன. மிகக் குறைவான நிறுவனங்களே, குறைந்த விலைக்கு ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்திருந்தன.

இதைத் தொடர்ந்து 91 நிறுவனங்களிடமும் இரண்டு கட்டங்களாக விலைக் குறைப்பு பேச்சுவார்த்தையை மின் வாரியம் நடத்தியது.

இதில் மொத்தம் 29 நிறுவனங்கள் மட்டுமே உடன்பட்டன. இவை மொத்தம் 226 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யவுள்ளன. இந்த 29 நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்களை மின் வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த நிறுவனங்களுக்கு உற்பத்திக்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு

திட்டத்துக்கு போதிய வரவேற்பு இல்லாததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தில் நிறுவனங்கள் சேருவதற்கான கால அவகாசத்தை மின் வாரியம் நீட்டித்துள்ளது.

இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்த பிற நிறுவனங்களும், திட்டத்தில் சேரும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் சார்பில் அதிகபட்சம் யூனிட் ரூ. 6.48 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 5 சதவீத விலை உயர்வு என்ற அளவில் 10 ஆண்டுகளுக்கு விலை திருத்தப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.