முகப்பு
தமிழ்நாடு

இன்று டெசோ பொது வேலைநிறுத்தம்: பஸ்- ரயில் சேவையில் பாதிப்பிருக்காது

திமுக அங்கம் வகிக்கும் டெசோ அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12)

Updated On : 12 மார்ச், 2013 at 2:18 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

திமுக அங்கம் வகிக்கும் டெசோ அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பு ஏற்படாத வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டம் குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை ஆலோசனை நடததினார்.

Advertisement

இந்தக் கூட்டத்தில், டெசோ பொது வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பஸ்- ரயில்கள் ஓடும்: டெசோ பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, மாநிலம் முழுவதும் போக்குவரத்துக் கழக பஸ்களை சீரான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சியான அதிமுகவின் தொழிற்சங்கத்திலும், இடதுசாரிகளின் தொழிற்சங்கங்களிலும் இருப்பதால் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபடுவர் எனவும், இதனால் போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்குவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவு அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., போன்ற தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், ஆட்டோக்கள் அனைத்தும் இயக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

டெசோ வேலை நிறுத்தம் தொடர்பாக, மத்திய அரசும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத காரணத்தால் ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

கடைகள் அடைக்கப்படாது: பொது வேலை நிறுத்தத்தின்போது, கடைகளை மூடுமாறு வணிகர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என வணிகர் சங்கங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதனால், அந்தச் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது எனத் தெரிகிறது.

டெசோ அமைப்பில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி கடைகளில் துண்டுப் பிரசுரங்களை திங்கள்கிழமை (மார்ச் 11) விநியோகம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு: டெசோ பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  பிரச்னைக்குரிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோகளை தடையின்றி இயக்கவும் போலீஸார் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். வேண்டுகோளின் அடிப்படையில் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.