மாணவர்கள் கைதுக்கு வைகோ கண்டனம்
இலங்கைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு
இலங்கைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்ச மீது பன்னாட்டு விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
Advertisement
யாருக்கும் இடையூறு இல்லாமல் தனியார் கட்டடத்தில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் திருமலை, மே - 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், திரைப்பட இயக்குநர் கௌதமன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையை நசுக்கும் விதத்தில் போலீஸார் செயல்பட்டிருப்பதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.