இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு: என்ஐஏவிடம் ஒப்படைப்பு
இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு
இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்படை வீரர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் வரம்பு கேரள அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து என்ஐஏ-விடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ மீண்டும் புதிதாகத் தொடங்கும். என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அல்லது அரசு அமைக்கும் வேறு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள கடல்பகுதியில் இத்தாலியின் "என்ரிகா லெக்ஸி' கப்பலில் இருந்த மாஸிமிலியனோ லதோர், சல்வடோர் ஜிரோன் ஆகிய கடற்படை வீரர்கள் அப்பகுதியில் படகில் சென்ற இரு இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என தவறாக நினைத்து சுட்டதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த இடம் சர்வதேச கடற்பகுதி என்பதால் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடக்க வேண்டுமென்று இத்தாலி கூறியது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பரோலில் இத்தாலி சென்ற கடற்படை வீரர்கள் இருவரையும் திரும்ப அனுப்ப மாட்டோம் என இத்தாலி அறிவித்தது. இதையடுத்து இந்தியாவில் உள்ள இத்தாலி தூதர் வெளியேறக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதன் பின்னர், கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை அடுத்து அவர்களை இத்தாலி திருப்பி அனுப்பியது.