முகப்பு
தமிழ்நாடு

கடலுக்குச் சென்றனர் ராமேசுவரம் மீனவர்கள்

16 நாள்களுக்குப் பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள்

Updated On : 2 ஏப்ரல், 2013 at 1:21 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

16 நாள்களுக்குப் பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 24 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.

தலைமை அஞ்சல் அலுவலகத்தை மார்ச் 22 ஆம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் செய்தனர். 30 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். மீனவர்களின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து 45 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலமும் வருவதால், தொடர்ந்து பொருளாதார இழப்பைச் சந்திக்கும் சூழ்நிலை காரணமாக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

Advertisement

இந்த நிலையில், மீன்வளத் துறை அனுமதி பெற்று 632 படகுகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை சென்றனர்.

ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வைத்துள்ள அறிவிப்புப் பலகையில், மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கப் போகக் கூடாது, அனுமதி அடையாள அட்டை இல்லாமல் மீன் பிடிக்கப் போகக்கூடாது, தடை செய்த வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது, அனுமதிச் சீட்டில் பதிவு செய்துள்ள மீனவர்களைத் தவிர வேறு யாரும் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று  பெயரைப் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும், விதிமுறைகளை மீறும் படகுகள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983ன்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.