முகப்பு
தமிழ்நாடு

கார்கள் மோதல்: கல்பாக்கம் விஞ்ஞானியின் மனைவி, குழந்தை உள்பட 3 பேர் சாவு

செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே திங்கள்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர்

Updated On : 2 ஏப்ரல் 2013, 2:22 am IST
பகிர்:

செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே திங்கள்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானியின் மனைவி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விஞ்ஞானி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக மணீஷ்குமார் (30) பணியாற்றி வருகிறார்.

இவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி தான்யா (28). இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை சமர்த். மணீஷ்குமார் தனது மனைவி, குழந்தையுடன் பெங்களூர் சென்றுவிட்டு திங்கள்கிழமை அதிகாலை ரயில் மூலம் சென்னை திரும்பினார். பின்னர் சென்னை சென்ட்ரலில் இருந்து வாடகை கார் மூலம் 3 பேரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் வந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

வாடகை காரை வில்லியம்பாக்கத்தைச் சேர்ந்த உமாபதி (32) என்பவர் ஓட்டிவந்தார். கார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சூளேரிகாடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வேகமாக  வந்த மற்றொரு வாடகை கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் விஞ்ஞானி வந்த வாடகை கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் விஞ்ஞானியின் மனைவி தான்யா, குழந்தை சமர்த், ஓட்டுநர் உமாபதி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அணு ஆராய்ச்சி விஞ்ஞானி மணீஷ்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும்  மணீஷ்குமார் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இறந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்துக்குக் காரணமான மற்றொரு காரின் ஓட்டுநர் ராஜேஷ் (24) கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.