கிழக்கு கடற்கரைச் சாலையில் கார்கள் மோதல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் சாவு
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கானத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பெண்கள்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கானத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
திருக்கழுக்குன்றம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (35). இவர் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இத் தம்பதியின் மகன் புவனேஷ் (11), தாயார் மனோன்மணி (60), மாமியார் கலைச்செல்வி (56), உறவினர் புஷ்பலிங்கம் (31) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூரில் உள்ள உறவினர் லிங்கையா என்பவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
Advertisement
அப்போது எதிரே புரசைவாக்கம் முருகப்பா தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (34), இவரது நண்பர்கள் திருவான்மியூர் 45-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (24), கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த தாமரை செல்வன் (33) ஆகியோர் புதுச்சேரிக்கு காரில் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கானத்தூர் அருகே இரு கார்களும் எதிர் எதிரே வரும்போது பயங்கரமாக மோதின. இதில் இரு கார்களும் அப்பளம்போல நொறுங்கின. கார் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்
இந்த விபத்தில் பழ வியாபாரி தனசேகர், மனோன்மணி, கலைச்செல்வி ஆகியோரும் மற்றொரு காரில் வந்த புரவைவாக்கம் செல்வகுமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த புவனேஸ்வரி, புவனேஷ், புஷ்பலிங்கம், கண்ணன், தாமரை செல்வன் ஆகியோர் பெரும்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரிழந்த செல்வகுமார் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.