சங்கராபுரம்-லாலாபேட்டை இடையே அரசு பஸ் வசதி இல்லாததால் கிராமப்புற மக்கள் அவதி
திருக்கோவிலூர் அருகே உள்ள லாலாபேட்டையில் இருந்து சங்கராபுரத்துக்கு அரசுப் பஸ் வசதி இல்லாததால் சுற்றியுள்ள
திருக்கோவிலூர் அருகே உள்ள லாலாபேட்டையில் இருந்து சங்கராபுரத்துக்கு அரசுப் பஸ் வசதி இல்லாததால் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் ஒன்றியம், லாலாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் அவசர, அவசியத் தேவைகளுக்காக 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தாலுக்கா தலைமையிடமான சங்கராபுரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கரும்பு அலுவலகம், வட்டார குழந்தைகள் நல அலுவலகம், மாதிரிப் பள்ளி, உண்டுஉறைவிடப் பள்ளி, வட்டார வேளாண்மை அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், வட்டார வள மையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்கு கிராமப்புற மக்கள் குறித்த நேரத்தில் சென்று வருவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது.
Advertisement
ஏனெனில், லாலாபேட்டை-சங்கராபுரம் இடையே போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லை. நாள் ஒன்றுக்கு இரண்டு நடை மட்டுமே தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்விரு பஸ்களை மக்கள் தவறவிட்டால் சங்கராபுரம் அல்லது பகண்டை கூட்டுரோட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப அரசு பஸ்களை இயக்கினால் மட்டுமே லாலாபேட்டை பகுதி மக்களின் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்ய முடியும்.
குறிப்பாக, சங்கராபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைந்தபின், லாலாபேட்டை பகுதிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படும் என்ற கடந்த கால அரசின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே சங்கராபுரம்-லாலாபேட்டை இடையே மாடாம்பூண்டி கூட்டுரோடு வழியாகவும், பகண்டை கூட்டுரோடு, எகால், அவிரியூர் வழியாகவும் அரசுப் பஸ்களை இயக்கிட போக்குவரத்துத்துறை இனியாவது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, முக்கிய கோரிக்கையும் கூட.