முகப்பு
தமிழ்நாடு

சுவாமி சகஜானந்தாவுக்கு மணிமண்டபம்: எம்.எல்.ஏ.விடம் தமிழக முதல்வர் உறுதி

சென்னையில் தமிழக முதல்வரை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில்

Updated On : 2 ஏப்ரல், 2013 at 1:48 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

சென்னையில் தமிழக முதல்வரை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்த போது சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவுக்கு மணி மண்டபம் அமைக்கவும், அவரது பெயரில் மகளிர் கலைக் கல்லூரி தொடங்கவும் விரைவில் உத்தரவுப் பிறப்பிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மனு விவரம்: ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சுவாமி சகஜானந்தா தனது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்தவர்.

இவரது முயற்சியால் சிதம்பரத்தில் 20-5-1918-ல் சிதம்பரத்தில் நந்தனார் பெயரில் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டு, படிப்படியாக உயர்ந்து இன்று தமிழகத்திலேயே ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளுடன் கூடிய அரசினர் நந்தனார் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது.  இக்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் இன்று தமிழகம் முழுவதும் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

Advertisement

சுவாமி சகஜானந்தா தமிழக சட்டமன்ற மேலவைக்கு 1926 ஆண்டு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1932-ம் ஆண்டு வரை மேலவை உறுப்பினராகவும், மீண்டும் 1936 முதல் 1947 வரை மேலவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

சுதந்திரமடைந்த பிறகு 1947-ல் சஜகானந்தா சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1959-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வரை பணியாற்றியுள்ளார். ÷இச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவுக்கு சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் மணி மண்டபம் கட்டி தமிழக அரசு புகழ் சேர்க்க வேண்டும். சகஜானந்தா பிறந்த நாளான ஜனவரி 27-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

சிதம்பரம் பகுதியில் பெண்களுக்கு என தனியாக கல்லூரி எதுவும் இல்லை. இருபாலர் படிக்கும் கல்லூரிதான் அரசு கலைக் கல்லூரியாக சிதம்பரம் அருகே சி.முட்லூரில் செயல்பட்டு வருகிறது.

எனவே சுவாமி சகஜானந்தா பெயரில் பெண்கள் அரசு கலைக் கல்லூரி ஒன்றை சிதம்பரத்தில் தொடங்க வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா சுவாமி சகஜானந்தாவுக்கு மணிமண்டபமும், அவரது பெயரில் மகளிர் கலைக் கல்லூரியும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவும் விரைவில் உத்தரவுப் பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.