ஸ்டெர்லைட் விவகாரம்: ஆதரவு, எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தனித்தனியாக மனுக்கள் அளித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுவாயு வெளியான சம்பவத்தையடுத்து மார்ச் 30-ஆம் தேதி ஆலை மூடப்பட்டது.
ஆதரவுக் குழுவினர்: இதற்கிடையே பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புனித லசால் தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்கள், ஏபிள் தாமிரா மகளிர் சுயஉதவிக்குழு, பெல் கல்வியியல் மற்றும் மகளிர் சமூக நல அமைப்பு, துளசி சமூக அறக்கட்டளை, பிஎஸ்டிஎஸ் தொழிற்பயிற்சிப் பள்ளி ஆகிய அமைப்புகளின் சார்பிலும் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆதரவாக மனு அளிக்கப்பட்டது.
எதிர்ப்புக் குழுவினர்: தூத்துக்குடி மாவட்ட மீனவர் ஐக்கிய முன்னணித் தலைவர் சேவியர் வாஸ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம் அளித்த மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மார்ச் 23-ஆம் தேதி நச்சுவாயு வெளியேறி பொதுமக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர். இந்த நச்சுக் காற்றால் செடிகள், மரங்களின் இலைகள் பூக்கள் நிறம் மாறி கருகி உதிர்ந்தன.
இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலை தொழிலாளர்களுக்கு தகுந்த நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தமிழர் களம் அமைப்பின் சார்பில் மாவட்டச் செயலர் அமலரசு, தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகச் செயலர் சுபாஷ் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.