தமிழகத்தில் ரூ. 2,500-க்கு கள்ளத் துப்பாக்கி விற்பனை: ராமதாஸ்
தமிழகத்தில் ரூ. 2,500-க்கு கள்ளத் துப்பாக்கி விற்கப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ரூ. 2,500-க்கு கள்ளத் துப்பாக்கி விற்கப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் வட இந்திய மாணவர்களால் மற்றவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுவது, கடத்தப்படுவது, தாக்கப்படுவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன.
Advertisement
Advertisement
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பிகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், கள்ளத் துப்பாக்கிகளைக் கடத்தி வந்து இங்குள்ள ரௌடிகளுக்கு விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் ரூ. 2,500-க்கு கள்ளத் துப்பாக்கிகள் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாகவும், இதனால் சாதாரண ரௌடிகளிடமும் கூட துப்பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான போலீஸாரிடம் துப்பாக்கி இல்லாத நிலையில் ரௌடிகளிடம் துப்பாக்கி அதிகரித்து வருவதாக வெளிவரும் செய்திகள், எதிர்காலத்தில் இது எத்தகைய சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. வட இந்திய மாணவர்களின் வன்முறைக் களமாக சென்னை மாறியதற்கு சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், பொறியியல் கல்லூரிகளும்தான் காரணம்.
இந்த கல்வி நிறுவனங்கள் ஆள் பிடிப்பதற்காக வட இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களை தரகர்களாக அமர்த்தியுள்ளன. மாணவர் சேர்க்கை இல்லாத நேரத்தில் இவர்கள் வழிப்பறி, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கல்லூரி விடுதிகளில் சோதனை நடத்த வேண்டும்: இது தொடர்ந்தால் ஒரு காலத்தில் வன்முறைக் காடாக விளங்கிய பிகார் போல தமிழகமும் மாறிவிடும். எனவே, சென்னையில் உள்ள வட இந்திய மாணவர்களைப் பற்றிய விவரங்களை காவல் துறையினர் சேகரிக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் விடுதிகளில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும்.
அரசு விடுதிகளில் ஆயுதங்கள்: சென்னையில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை சில சக்திகள் தூண்டிவிட்டு சட்ட விரோதச் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.
இத்தகைய மாணவர்களை மூளைச் சலவை செய்து அவர்களின் விடுதி அறைகளில் ஆயுதங்களைப் பதுக்கி வைப்பதால், இந்த விடுதிகளிலும் அவ்வப்போது சோதனை நடத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.