முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

Updated On : 12 ஏப்ரல் 2013, 3:01 am IST
பகிர்:

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே ஹெல்ப் லைன் எண்ணுக்கு வியாழக்கிழமை பகல் 3.15 மற்றும் 3.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து, ரயில்வே ஹெல்ப் லைன் பிரிவு போலீஸார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் புதிய பஸ் நிலையத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

மேலும், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள், கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக சோதனை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதால் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.

ஏறத்தாழ 2 மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.