முகப்பு
தமிழ்நாடு

3 பேருக்கு விதிக்கப்பட்ட தலா 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், 3 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 2:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், 3 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர், ஜாபர் சாதிக், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மூவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement

அதன் விவரம்: கீரனூர் காவல் நிலையப் போலீஸாரால் சுந்தர், ஜாபர் சாதிக், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் 2006 செப்.24 இல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை இப்ராஹிம் ஷா என்பவரிடம் இருந்து 2006 ஜூலை 23 ஆம் தேதி சுந்தரிடம் கை மாறியுள்ளது. ஆனால், 2 மாதங்களுக்குப் பிறகே அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பொருளை இத்தனை நாள்களுக்கு மறைத்து வைத்திருந்ததாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லையென, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்ராஹிம் ஷா தான் தடை செய்யப்பட்ட பொருளை கொடுத்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதும், அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அவர் கைது செய்யப்பட்டாரா? அல்லது தலைமறைவாக உள்ளாரா? என்பது தெரிவிக்கப்படவில்லை.

சுந்தரிடம் இருந்து 2006 செப்.24 ஆம் தேதியும், அலெக்ஸ் பாண்டியனிடம் இருந்து அக்.13 ஆம் தேதியும் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை 2006 நவ.9 ஆம் தேதி தான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கான காரணத்தையும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. மேலும் ஜாபர் சாதிக் கொடுத்து வைத்திருந்ததாக, பாபுஜி என்பவரது வீட்டிலிருந்தும் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பாபுஜியிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரத்தேவையில்லை. குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பொருளை பறிமுதல் செய்த பிறகு அவை தடய அறிவியல் கூடத்துக்கு அனுப்பும் வரை எங்கு வைக்கப்பட்டிருந்தது? என்பது விளக்கப்படவில்லை. மேலும் தடை செய்யப்பட்ட பொருளை சோதனைக் கூடத்துக்கு அனுப்புவதற்கான சட்ட நடைமுறைகளை விசாரணை அதிகாரி பின்பற்றவில்லை.

மனுதாரர் தரப்பு எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு சரியான விளக்கத்தை அரசுத் தரப்பால் தெரிவிக்க முடியவில்லை. ஆகவே, மனுதாரர்களின் மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.