கிணற்றில் விழுந்து 6 புள்ளிமான்கள் சாவு
குடிநீர் தேடி வனப் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த 6 புள்ளிமான்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்தன.
குடிநீர் தேடி வனப் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த 6 புள்ளிமான்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்தன.
தருமபுரி மாவட்டம், அரூர் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட மொரப்பூர், அரூர், தீர்த்தமலை வனச் சரகங்களில் அதிகாரப்பட்டி, வாச்சாத்தி, எட்டிப்பட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன.
இவை குடிநீர் தேடி அரூர்- தருமபுரி, சிந்தல்பாடி சாலைகளை கடக்கும்போது, வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.
Advertisement
எட்டிப்பட்டி கிராமம் அருகே குடிநீர் தேடி ஞாயிற்றுக்கிழமை வந்த 3 புள்ளிமான்கள் நயினார் என்பவரின் கிணற்றில் தவறி விழுந்தன. இதில் இரு புள்ளிமான்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தன. ஒரு மான் உயிருடன் மீட்கப்பட்டது. அதேபோல், எச்.அக்ரஹாரம், ஏ.வெளாம்பட்டி பகுதியில் விவசாயக் கிணறுகளில் விழுந்து 4 புள்ளிமான்கள் உயிரிழந்தன. பின்னர், அவை மீட்கப்பட்டு வனப் பகுதியில் புதைக்கப்பட்டன.
மொரப்பூர், அரூர் வனப் பகுதியில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய குடிநீர்த் தொட்டிகள் அமைக்க நிதி ஒதுக்கக் கோரி, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
தாற்காலிக நடவடிக்கையாக குடிநீரை விலைக்கு வாங்கி வனப் பகுதியில் சிறு குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.