தாற்காலிக டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய சிறப்புத் தேர்வு
அரசு மருத்துவமனைகளில் தாற்காலிகமாக பணிபுரியும் டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய டி.என்.பி.எஸ்.சி. சிறப்புத் தேர்வை நடத்த வேண்டும் என சமூக
அரசு மருத்துவமனைகளில் தாற்காலிகமாக பணிபுரியும் டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய டி.என்.பி.எஸ்.சி. சிறப்புத் தேர்வை நடத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்தரநாத் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் 3,000க்கும் அதிகமான டாக்டர்கள் 3 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் தாற்காலிக அடிப்படையில் பணிபுரிகின்றனர். தாற்காலிக டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. சிறப்புத் தேர்வு ஏப்ரல் 21-ம் தேதி நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
எனவே அவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்.
மேலும் 2 ஆண்டுகள் அரசுப் பணியை முடித்திருந்தால், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என அரசாணை உள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் தாற்காலிக டாக்டர்களும் முதுநிலை மருத்துவம் பயில அனுமதிக்க வேண்டும்.
காலியாக உள்ள பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி, தாற்காலிக அடிப்படையில் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாற்காலிகப் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தப்பட்டால், அது ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே புதிய மருத்துவர்கள் பணி நியமனத்தை வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் நுழைவுத் தேர்வையும், மாநில அரசின் நுழைவுத் தேர்வையும் எழுதிவிட்டு முடிவுக்காக டாக்டர்கள் காத்திருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் முடிவுகளை வெளியிட முடியாத நிலை உள்ளது. ஆகவே, வழக்கை துரிதமாக முடித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்றார் ரவீந்தரநாத்.