திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ: ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் சாம்பல்
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பின்னலாடைகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பின்னலாடைகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
திருப்பூர், குமரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (63). அவருக்கு பி.என். சாலை, ராம் நகர் 4 ஆவது வீதியில் பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு பின்னலாடைகள், உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. 2 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் கட்டிங் பிரிவு, தையல் பிரிவு, செக்கிங், பேக்கிங் பிரிவுகள் உள்ளன. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களில் சிலர் அங்கேயே தங்கி உள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 5 தொழிலாளர்கள் மொட்டை மாடியில் படுத்திருந்தனர். இரவு 2 மணியளவில் மின்தடை ஏற்பட்ட சமயத்தில் அந்த நிறுவனத்தின் அருகில் வசிக்கும் நபர் வீட்டுக்கு வெளியே வந்தபோது, பனியன் நிறுவனத்தில் தீப் பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்தாராம். மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை எழுப்புவதற்காக பக்கத்து வீட்டு நபர் கல்லை எடுத்து 2 ஆவது மாடி ஜன்னலை நோக்கி வீசி உடைத்தாராம். இது குறித்து பனியன் நிறுவன உரிமையாளருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் அந்த நபரே தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாடியில் இருந்த தொழிலாளர்கள் பக்கத்து கட்டடத்தின் மாடி வழியாக கீழே இறங்கி தப்பினர்.
Advertisement
Advertisement
தரைத்தளத்தில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த பொருள்கள் பற்றி எரிந்து அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோட்ட தீயணைப்பு அலுவலர் காங்கயம்பூபதி, திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கு.செந்தில்குமார், திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் 20 தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர். 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தில், தரைத்தளம் மற்றும் 2 மாடிகளில் இருந்த பின்னலாடைகள், உள்ளாடைகள், பனியன் துணி பண்டல்கள், தையல் இயந்திரங்கள், கட்டிங் இயந்திரங்கள் என அனைத்து இயந்திரங்களும், பொருள்களும் எரிந்து சாம்பலாயின. இத்தீவிபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாகத் தெரிகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.