பணி நியமன ஆணைக்காகக் காத்திருக்கும் 396 இளநிலை உதவியாளர்கள்
பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 396 பேர் பணி நியமன ஆணைக்காக
பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 396 பேர் பணி நியமன ஆணைக்காக கடந்த 4 மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.
அரசு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பணியில் இருக்கும் போது திடீரென இறந்தால், அவர்களின் மனைவி அல்லது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு பணிகளில் பணியாற்றி பணியில் இருந்த போது இறந்தவர்களின் வாரிசுகள் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் அரசு பணிக்காகக் காத்திருக்கின்றனர்.
Advertisement
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் உள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது.
÷டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் இப்பணியில் குறிப்பிட்ட பணியிடங்களை கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் காத்திருந்த வாரிசுகள் 396 பேர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கருணை மூப்பு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான பணி நியமன ஆணைகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கையொப்பமிட்டு கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி வழங்கத் தயாராக இருந்தனர். இந்நிலையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணை வழங்க உள்ளார்,
÷அதே நேரத்தில் இவர்கள் 396 பேருக்கும் அதே மேடையில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தயார் செய்திருந்த பணி நியமன ஆணைகள் பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு கடந்த டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பணி நியமன ஆணை வழங்குவது குறித்து பயனாளிகளுக்கு செல்போனில் தகவல் தரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட போது, கருணை அடிப்படையிலான இளநிலை உதவியாளர்கள் 396 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை.
÷அவர்களுக்கு இதுவரை அதற்கான விளக்கமோ, பணி நியமன ஆணை எப்போது வழங்கப்படும் என்பது குறித்தோ கல்வித்துறை அறிவிக்கவில்லை. எனவே 396 பேருக்குக்கும் பணி நியமன ஆணையை உடனடியாக அளித்து, உரிய இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.