விழுப்புரத்தில் நெரிசலில் திணறும் புதுச்சேரி சாலை!
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகி வரும் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், வாகனஓட்டுநர்கள், பாதசாரிகள்
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகி வரும் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், வாகனஓட்டுநர்கள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரத்தில் போக்குவரத்து மிகுந்த புதுச்சேரி சாலையில் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மார்க்கெட் பகுதியும் இச் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதனால் இச்சாலையில் மக்கள் மற்றும் வாகனப் பெருக்கம் எந்நேரமும் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக புதுச்சேரியில் இருந்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் சென்று வரும் இந்த முக்கிய சாலையோரத்தை பல வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து கடைகளை விரிவுபடுத்துகின்றனர். இக் கடைகளுக்கு வருபவர்கள் பலர் தங்கள் வாகனங்களை இச் சாலையை ஒட்டி நிறுத்துகின்றனர். இதேபோல் பலர் சாலையை ஆக்கிரமித்து தெருவோர கடைகளை அமைத்துள்ளனர்.
Advertisement
இதனால் இப்பகுதி சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் இச் சாலையில் விழுப்புரம் நகரத்துக்கு உள்பட்ட 2 கி.மீ தூரத்தை வாகனங்களில் கடப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகிறது
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விழுப்புரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். சாலையோரங்களில் பதாகைகள் வைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் இருந்து திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் நகரப் பகுதிகளுக்குள் வராத வகையில் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா.தமிழ்வேங்கை கூறும்போது சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினால், சாலை விரிவு பெறும். வாகனம் நிறுத்துவதற்கு தனியான இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.