வறட்சி பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த மத்தியக் குழு மே 6-ல் தமிழகம் வருகை
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் மே 6-ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் மே 6-ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.
இந்தக் குழுவினர் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் தங்களது ஆய்வினை தீவிரமாக மேற்கொள்வர் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்கெனவே நிவாரண உதவிகளை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, பிற மாவட்டங்களில் ஆய்வு செய்ய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைத்தார். இந்தக் குழுவினர் 18 மாவட்டங்களில் தங்களது ஆய்வினை வெவ்வேறு நாள்களில் மேற்கொண்டனர்.
அரசுக்கு அறிக்கை: மார்ச் 16- ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என தென் மாவட்டங்களில் தொடங்கிய ஆய்வு கரூர், பெரம்பலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முடிவடைந்தது.
இந்தக் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில், டெல்டா அல்லாத தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு ரூ.1,754.86 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்புகளை சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 19- ஆம் தேதி அறிவித்தார்.
மத்திய அரசுக்குக் கோரிக்கை: சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுக்கு ரூ.19,665.13 கோடி மதிப்பிலான நிவாரண கோரிக்கை மனுவை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு மே 6 ஆம் தேதி தமிழகம் வருகிறது.
இந்தக் குழுவின் அதிகாரப்பூர்வ பயணத் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை (மே 2) அறிவிப்பு வெளியாகும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று நாள்கள் வரை ஆய்வு: மத்தியக் குழுவினர் திருச்சி மற்றும் மதுரையை மையமாகக் கொண்டு, அதாவது தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் தங்களது கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்வர் எனத் தெரிகிறது. இந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கான வறட்சி நிவாரண நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மே 9 அல்லது 10-ஆம் தேதி வரை நடைபெறும் கள ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து மத்தியக் குழுவினர் சென்னையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவர் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் சார்பில் மத்தியக் குழுவிடம் வறட்சி நிவாரணம் தொடர்பான கோரிக்கை மனுவும், ஏற்கெனவே அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் நகல்களும் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.