எருது ஆட்டத்துக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்: சேலம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கிராமத் திருவிழாவின்போது எருது ஆட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்
கிராமத் திருவிழாவின்போது எருது ஆட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பி.சிவானந்தம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சேலம் மாவட்டம், புத்தூர் அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயில் திருவிழா மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவின்போது எருது ஆட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் எருது ஆட்டம் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடந்த மே 5-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் அனுமதி மறுத்தது சரியல்ல. எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று எருது ஆட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குமாறு சேலம் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
Advertisement
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.வேணுகோபால் அண்மையில் தீர்ப்பளித்தார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி அளிக்க ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அந்த நிபந்தனைகளின்படி எருதாட்டம் நிகழ்ச்சியை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் ரூ.2 லட்சம் டெபாசிட் செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, புத்தூர் அக்ரஹாரம் முனியப்பன் கோயில் திருவிழாவின்போது எருது ஆட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து சேலம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, எருது ஆட்டம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது பற்றி சேலம் ஆட்சியர் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.