முகப்பு
தமிழ்நாடு

கார்- தனியார் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாவு

காரும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 12 ஜூன், 2013 at 2:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

காரும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் பெருமாள் (எ) கலியபெருமாள் (60). கார் ஓட்டுநர்.

இவர், சில மாதங்களாக தனது குடும்பத்துடன் திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை இசுக்கழி காட்டேரி கிராமத்தில் குல தெய்வ பூஜை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

இதற்காக, செவ்வாய்க்கிழமை காலை கீழ்நாத்தூரில் இருந்து பெருமாள் தனது மனைவி செல்வி (55), மகன் ரவி (36), மருமகள் மஞ்சுளா (26), பேரன்கள் சூரியா (5), ஆரியா (எ) பிரகாஷ் (3) ஆகியோருடன் காரில் புறப்பட்டார். திருவண்ணாமலை-விழுப்புரம் சாலை, ஏந்தல் கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மாட்டு வண்டியை முந்திச் செல்ல முயன்றாராம்.

அப்போது, திருவண்ணாமலை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் பேருந்துக்கு அடியில் சிக்கி நொறுங்கியது. இதில் காரில் சென்ற 6 பேரும் படுகாயமடைந்தனர்.

பொதுமக்கள் திரண்டு காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால், சம்பவ இடத்திலேயே கலியபெருமாள், மஞ்சுளா, சூரியா, ஆரியா ஆகியோர் இறந்தனர். படுகாயமடைந்த செல்வி, ரவி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வி இறந்தார்.

படுகாயமடைந்த ரவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இவ் விபத்தால் திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.