முகப்பு
தமிழ்நாடு

திமுக திட்டங்களைத் தடுப்பதுதான் ஜெயலலிதாவின் சாதனை

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தடுப்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையாக இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

Updated On : 12 ஜூன், 2013 at 2:26 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தடுப்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையாக இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 90- ஆவது பிறந்த நாள் விழா,தேர்தல் நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டம் ஆகியன மாவட்டச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது:

தேர்தல் செலவுக்காக நிதி வசூலிக்க வேண்டியுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் அவருக்குத் தகுதி உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் அவர் பிறந்தநாளின் அறிவிப்பாகும். 150 ஆண்டுகால கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். ஜெயலலிதாகூட தேர்தல் அறிக்கையில் இதை வலியுறுத்திய நிலையில் இப்போது தேவையில்லை என்கிறார்.

Advertisement

இத் திட்டத்தை ஆரம்பத்தில் வலியுறுத்திய வைகோ, ஜெயலலிதா கூறியதற்கு இப்போது மெüனமாக உள்ளார். திமுகவுக்கு சிறப்பு வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தைப் பூட்டியது, சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு என திமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களைத் தடுப்பதுதான் ஜெயலலிதாவின் சாதனையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது என்றார்.

இக் கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் முதல்கட்ட தேர்தல் நிதியாக ரூ.4.55 கோடியை மு.க.ஸ்டாலினிடம் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.