வடுகபட்டியில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய அதிகாரி விசாரணை
உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய இயக்குநர் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய இயக்குநர் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
இக்கிராமத்தில் சில நாள்களுக்கு முன், அருண்குமார் என்ற சிறுவனை, அதே ஊரைச் சேர்ந்த நிலமாலை என்பவர் செருப்பு சுமக்க வைத்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக புகாரின்பேரில், போலீஸôர் வழக்குப்பதிந்து நிலமாலை, அவரது தந்தை, சகோதரர் ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
Advertisement
இப்பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பதற்றமான சூழலையும் உருவாக்கியது.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், அப்பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அக்கிராமத்துக்கு தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய இயக்குநர் வெங்கடேசன் மற்றும் இனியன், உசிலம்பட்டி வட்டாட்சியர் பாட்ஷா, வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் ஆண்டி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சிறுவன் அருண்குமார், அவரது தாயாரிடம் நேரடியாக நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். அவ்வூரைச் சேர்ந்த தமிழரசன், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, மால் வசந்தன், சித்ரா, பாண்டியன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்தக் கிராமத்தில் குடிநீர் வசதி, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மயான வசதி அமைத்து தரும்படி கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது வெங்கடேசன் தெரிவிக்கையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள், இனி மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் நடக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டி.எஸ்.பி. சரவணக்குமார், ஆய்வாளர் ராமச்சந்திரன், தனி துணை ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், மகாதேவன், உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.