முகப்பு
தமிழ்நாடு

2 நாளில் 20 பள்ளி வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 2 நாளில் உரிய தகுதிச் சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட 20 பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 12 ஜூன் 2013, 2:20 am IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 2 நாளில் உரிய தகுதிச் சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட 20 பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் 748 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 200 வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், மீனம்பாக்கம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது உரிய தகுதிச் சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நெல்லையப்பர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில், காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் விநாயகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளி, காஞ்சிபுரம் கிறிஸ்துராஜா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 பள்ளி வாகனங்கள், வாலாஜாபாத் அமிர்தம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வாகனம் ஒன்று என மொத்தம் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தனியார் பள்ளி வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.

அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 7 வாகனங்களை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

மேலும் அந்த வாகனங்களுக்கு உரிய தகுதிச் சான்று இல்லை என்பதும் தெரிய வந்தது.

இது தவிர சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்த வேண்டிய வேனில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்ததாக ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்ததாக 3 ஆட்டோக்கள் என மொத்தம் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாம்பரம்: தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நடத்திய தீவிர சோதனையில் சென்னை பி.எஸ்.பி.பி. மில்லினியம் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த 2 வாகனங்கள் உரிய தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பள்ளி திறந்த 2 நாளில் இதுவரை மாவட்டத்தில் 20 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.