முகப்பு
தமிழ்நாடு

உத்தரகண்ட் வெள்ளம்: விழுப்புரம் யாத்ரிகர் சாவு

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 37 பேரில் விழுப்புரம் பெண் யாத்ரிகர் ஒருவர் இறந்தார். ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Updated On : 22 ஜூன், 2013 at 3:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 37 பேரில் விழுப்புரம் பெண் யாத்ரிகர் ஒருவர் இறந்தார். ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கங்கை, துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தில் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்ற விழுப்புரம் யாத்ரீகர்கள் 37 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் உத்ரகாசி மாவட்டத்தில் குப்தகாசி என்ற இடத்தில் முகாமில் தங்கியிருந்தனர். இவர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு கடந்த 14-ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட்டுவிட்டது. தொடர்ச்சியாக நான்கு தினங்களுக்கு மேல் தங்கியிருந்ததால் இவர்கள் உணவுக்கு வழியில்லாமல் தவித்து வருவதாக யாத்ரீகர் ஒருவர் அங்குள்ள ஒருவரிடம் இருந்த தொலைபேசி மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சிக்கியவர்களை மீட்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்திடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

Advertisement

இந்நிலையில் இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டு ஹரித்வார் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஹரித்வார் வந்து சேர்ந்த யாத்ரிகர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி அருணாசலம் தொலைபேசியில் கூறியது: நாங்கள் மழை, வெள்ளத்தால் பத்ரிநாத்துக்கும்-கேதார்நாத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டோம். நாங்கள் உத்ரகாசியில் உள்ள முகாமில் தங்கியிருந்தோம். அப்போது விழுப்புரம் குபேரத் தெருவைச் சேர்ந்த விஜயா பாஸ்கரன் (65) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் உணவு இல்லாமலும், மருந்து இல்லாமல் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில் நாங்கள் தங்கியிருந்த முகாம் இடிந்து விழும் நிலையில் உள்ளது என்று எச்சரிக்கை விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த யாத்ரிகர்கள் அனைவரும் இடம்பெயர்ந்து ஓடினர். இதனால் விழுப்புரத்தில் இருந்து சென்ற 37 பேரும் பல்வேறு குழுக்களாக பிரிந்துவிட்டோம். நாங்கள் ஒரு பாலத்தை கடக்கும்போது விழுப்புரம் மார்கெட் வீதி அருகே வசிக்கும் எல்.ஆர்.பாபு (53) வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரைக் காப்பாற்ற முயன்றோம். ஆனால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஸ்ரீலதா, மணிகண்டன், சித்ரா ஆகியோர் வெள்ளம் அதிகம் இருப்பதால் அப் பகுதியில் இருந்து வெளியில் வரமுடியாதபடி காட்டுப் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். மீதமுள்ள 12 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இருந்து யாத்திரை சென்றவர்களில் விஜயா பாஸ்கரன் இறந்துவிட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாபுவும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்தால் விழுப்புரம் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்திடம் கேட்டபோது, இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றார். இந் நிலையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த விஜயா பாஸ்கரன் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்திடம் அவரது உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.