தொடர் போராட்டம்: என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் முடிவு
என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியது:
எஸ்.ராசவன்னியன், பொதுச்செயலர், தொமுச: என்எல்சி நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் நடவடிக்கை இன்று நேற்று தொடங்கியது அல்ல. ÷தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை மத்திய அரசு மேற்கொண்டு வருவது நல்லதும் அல்ல. 2006-ல் இதேபோன்று ஒரு நிலை ஏற்பட்டபோது, அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மத்திய அரசை நிர்பந்தித்து அடிபணிய வைத்தார்.
Advertisement
என்எல்சி நிறுவனம் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.420 கோடி வழங்கப்பட்டது. வருங்காலத்தில் இத்தொகை உயர வாய்ப்புள்ளது.
எனவே தற்போது 5 சதவீத பங்கை விற்று ரூ.466 கோடி நிதி திரட்டப் போகிறோம் என்று மத்திய அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஓரணியில் திரண்டு மத்திய அரசு தனது முடிவை கைவிடும் வரை தொடர் போராட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என எச்சரித்துள்ளார்.
ஆர்.உதயக்குமார் செயலர் அதிமுக தொழிற்சங்கம்: தற்போதைய தமிழக முதல்வர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
முதல்வரின் வழிகாட்டுதலுடன் மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்துப் போராட ஆயத்தமாகி வருகிறோம் என்றார் உதயக்குமார்.
கே.குப்புசாமி தலைவர், சிஐடியு: மத்தியில் ஆளும் அரசுகள் தனியார்மய கொள்கையை எந்த வடிவிலாவது திணித்து விடவேண்டும் என்பதில் குறியாக உள்ளன. அதுவும் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனம் என்எல்சி.
இதையும் தனியாருக்கு தாரைவார்த்து விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. இந்நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால் தான் குறைந்த கட்டணத்தில் நாம் மின்சாரத்தைப் பயன்படுத்த முடிகிறது.
எனவே மத்திய அரசு இம்முடிவை உடனடியாக ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும். ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் குப்புசாமி.