காதலித்து ஏமாற்றிய விவகாரம்: குன்னூர் நீதிபதிக்கு ஜாமீன்
பல்லடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியை காதலித்து ஏமாற்றியதாகக் கைது
பல்லடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியை காதலித்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்ட குன்னூர் குற்றவியல் நீதிபதி தங்கராஜுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பல்லடம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி (31). அவர் பல்லடம் மகளிர் காவல்நிலையத்தில் குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் மீது கடந்த சனிக்கிழமை புகார் கொடுத்தார்.
அதில் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் பழகிய தங்கராஜ், தன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதன்பேரில் பல்லடம் போலீஸார் நீதிபதி தங்கராஜ், அவரது தந்தை செம்பான், தாய் காவேரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன்பின், பல்லடம் போலீஸார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்த தங்கராஜை கைது செய்து, திருப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) நீதிபதி ராமச்சந்திரன் முன் ஆஜர்படுத்தினர்.
வரும் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் தங்கராஜை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக தங்கராஜை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பிறகு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தங்கராஜ் தரப்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அரசுத் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகு தங்கராஜை சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து மாவட்ட நீதிபதி கே.கணேசன் உத்தரவிட்டார்.