குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 27-ல் தொடக்கம்
குற்றாலம் சாரல் திருவிழா வரும் 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு நடைபெறுகிறது.
குற்றாலம் சாரல் திருவிழா வரும் 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு நடைபெறுகிறது.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சாரல் திருவிழாவை வரும் 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடத்தவும், விழா நாள்களில் பல்சுவை நிகழ்ச்சிகள், சதுரங்கம், கோலப் போட்டி, இந்திய கலாசார ஆடை அலங்காரப் போட்டி, படகுப் போட்டி, வாலிபால், நீச்சல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதிகளை செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் மலர், பழங்கள், காய்கறி, வாசனைப் பொருள்கள், நாய்கள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய கார்கள் கண்காட்சி நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குற்றாலத்தில் சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அவசர கால ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Advertisement