பிறருக்கு உதவுவதே உண்மையான இறைப்பணி: சுவாமி விமூர்த்தானந்தர்
பிறருக்கு உதவுவதே உண்மையான இறைப்பணி என்று "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக இதழின்
பிறருக்கு உதவுவதே உண்மையான இறைப்பணி என்று "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்தார்.
"எண்ணங்களின் சங்கமம்' அமைப்பு சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது:
"ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதைப் பற்றியே பேசுங்கள், அதையே சிந்தியுங்கள், அது குறித்து கனவு காணுங்கள்' என்பது விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. அதைத்தான் "விழித்துக் கொண்டிருக்கும்போதே கனவு காணுங்கள்' என்றார் அப்துல் கலாம்.
Advertisement
முன்னாள் இந்திய கால்பந்து வீராங்கனையான அருணிமா சின்ஹா கடந்த ஆண்டு தில்லிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சில திருடர்கள் பயணிகளை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.
இதைத் தட்டிக் கேட்ட அருணிமா சின்ஹா திருடர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் அவரது இடது கால் துண்டானது. மருத்துவ சிகிச்சையில் அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் மேற்கொண்ட முறையான பயிற்சிகள் மற்றும் விடாமுயற்சியின் விளைவாக எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு அண்மையில் சாதனை படைத்தார். எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையையும் பெற்றார் அருணிமா சின்ஹா. எவரெஸ்ட் உச்சிக்கு சென்ற அவர் 2 புகைப்படங்களை அங்கே வைத்துவிட்டு வந்தார். அதில் ஒன்று சிவபெருமானின் படம்; மற்றொன்று சுவாமி விவேகானந்தரின் படம்.
வாழ்ந்ததற்கான நல்ல அடையாளத்தை இந்த உலகில் விட்டுச் செல்லுங்கள் என்ற விவேகானந்தரின் வார்த்தை அந்தப் பெண்ணுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் அளித்துள்ளது. அதனால்தான் அவரது படத்தை அங்கு வைத்துவிட்டு வந்துள்ளார்.
எனவே விவேகானந்தரைப் படியுங்கள், அவர் வார்த்தையைப் பின்பற்றுங்கள், எந்த உயரத்தையும் உங்களால் அடைய முடியும்.
ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். அதைக் காட்டிலும் சிறந்த இறைப்பணி எதுவுமில்லை என்றார் விமூர்த்தானந்தர்.
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.வன்னியராஜன் பேசியது: "நம் நாட்டில் உள்ள கடவுள்களின் படங்களை ஓரத்தில் வைத்துவிட்டு, இஷ்ட தெய்வமாக பாரத மாதாவை மையத்தில் வைத்து வழிபடுங்கள் என்று கூறினார் விவேகானந்தர். இந்தச் சமுதாயத்தை முதலில் நேசியுங்கள், அதுதான் நமது முதல் தெய்வம் என்பதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்.
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி இளைஞர்களுக்கு உண்டு. விவேகானந்தர் விரும்பிய இளைய சமுதாயம் இன்று உருவாகி வருகிறது' என்றார் வன்னியராஜன்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான தொடர்பு அமைப்பின் (என்.டி.எஸ்.ஓ.) தலைவர் ஜி. அழகர் ராமானுஜம் பேசியது:
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் ஏராளமான துறவியர்கள் இருந்தாலும் அவர் மட்டும் இன்னமும் நினைவுகூரப்படுகிறார்.
அரண்மனையிலும், ரிஷிகளின் குடிசையிலும் இருந்த தத்துவத்தை, சாதாரண மக்களிடம் கொண்டுச் சென்றவர் புத்தர். "அனைத்தும் சமம்' என்ற அத்வைதத்தைப் போதித்தவர் ஆதிசங்கரர். இறை தத்துவத்தை இலக்கியமாக மாற்றியமைத்தவர்கள் ஆழ்வார்கள், நாயன்மார்கள். அதனால்தான் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
மற்ற துறவிகளைப்போல இறைவன், ஆன்மிகம் என்று இல்லாமல் மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர் விவேகானந்தர். மக்களிடம் இருந்த இறையுணர்வை தேசிய உணர்வாக மாற்றியவர். அதனால்தான் 150 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பற்றி பேசுகிறோம்.
தனக்காக மட்டும் வாழ்பவர்கள் நடைபிணத்துக்குச் சமம். மற்றவர்களுக்காக வாழ்பவர்களே சிறந்த மனிதர்கள் என்றார் விவேகானந்தர். இதையேதான் திருவள்ளுவரும் கூறுகிறார்.
எனவே, மற்றவர்களுக்காக வாழும் எண்ணத்தை இளைஞர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அழகர் ராமானுஜம்.