முகப்பு
தமிழ்நாடு

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு: கொல்கத்தா அச்சக உரிமையாளர் கைது

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கொல்கத்தாவை சேர்ந்த அச்சக உரிமையாளரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 12 ஜூலை, 2013 at 4:29 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கொல்கத்தாவை சேர்ந்த அச்சக உரிமையாளரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 12.8.2012-ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முன்கூட்டியே வினாத்தாளை வைத்திருந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் உள்பட மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தை úóந்த மனோகரன் மகன் மோகன்பாபு (24), சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கணக்காளராக பணியாற்றும் ஜெய்நிவாசன் (26), மேடவாக்கத்தை சேர்ந்த பச்சியப்பன் மகன் சதீஷ்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதேபோல நாமக்கல்லை சேர்ந்த இன்டர்நெட் மைய உரிமையாளர் செல்வராஜ்,

திருவள்ளூரை சேர்ந்த சகோதரர்கள் தியாகராஜன், செந்தில்குமார், பாலன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ரயில்வே பணிமனையில் ஃபிட்டராக பணியாற்றி வந்த ஆனந்தராவ் ஆகியோரை ஈரோடு போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வணிக வரித் துறை இணை ஆணையராக பணியாற்றிய ரவிக்குமார், கடலூரை சேர்ந்த இடைத்தரர்கள் மூவரையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அச்சக உரிமையாளர் ரிஷிகேஷ் குண்டு (56) என்பவரை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இவரது அச்சகத்தில் இருந்துதான் ஒடிசா, ஆந்திரம் வழியாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வினாத்தாள் கடத்தப்பட்டதாக தெரிவந்துள்ளது.

இவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண்: 3) மாஜிஸ்திரேட் கவிதா முன்னிலையில் போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி போலீஸார் மனு அளித்தனர்.

இம்மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.

சிறையில் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று ரிஷிகேஷ் குண்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், முதல் வகுப்பு வழங்க உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல உண்மைகள் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.